புதன், 29 டிசம்பர், 2010

ஈரான் அணுசக்தி நாடு - அஹ்மத் நஜாத் பிரகடனம்

டெஹ்ரான்,டிச.29:ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டி அந்நாடு அணுசக்தி நாடாக மாறியுள்ளது என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் பிரகடனப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நிர்பந்தத்தாலும், பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும் ஈரானுக்கெதிராக ஐ.நா தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அவர்கள் அனைவரின் முயற்சிகளையெல்லாம் தோற்கடித்து ஈரான் அணு சக்தி நாடாக மாறியுள்ளது என கரஜில் தெற்கு நகரத்தில் கூடியிருந்த மக்களிடையே அஹ்மத் நஜாத் பிரகடனப்படுத்தினார்.

உலக வல்லரசுகளுக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, இஸ்லாமிய நாடான ஈரானுக்கெதிராக தீர்மானங்களை நிறைவேற்றும் அவர்களின் பழைய வழி. இரண்டாவது ஈரானுடன் ஒத்துழைப்பது. முதல் வழி சரியல்ல என்பது முன்னரே தெளிவாகிவிட்டது என நஜாத் தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு தீர்வு காண்பதற்கு ஒரே வழி மோதல் அல்ல மாறாக ஒத்துழைத்து செயலாற்றுவதாகும். ஈரானின் உரிமைகளை புரிந்துக்கொண்டு அதனுடன் மேற்கத்திய சக்திகள் இணைந்து செயல்பட்டேயாக வேண்டும். உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இணைந்து செயல்பட ஈரான் தயார். உரிமைகளை பெறுவதில் ஈரானை தடுப்பவர்கள் அதன் பலனை அனுபவிக்க வேண்டிவரும் என மேற்கத்திய நாடுகளுக்கு நஜாத் எச்சரிக்கை விடுத்தார்.

ஈரானுக்கெதிராக ஐ.நா நிறைவேற்றிய தீர்மானம் சட்டவிரோதம் என கூறிய நஜாத் ஈரான் முன்னேறிச் செல்லும் வேகத்தை அதிகரிக்கவே இத்தீர்மானம் உதவும் என தெரிவித்தார்.

ஈரானின் முதல் அணுசக்தி நிலையமான புஷ்ஹர் வருகிற ஜனவரி மாத இறுதியில் செயல்பட துவங்குமென ஈரான் அணுசக்தித்துறை தலைவர் அலி அக்பர் ஸலேஹி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதற்கு பின்னர் அஹ்மத் நஜாத் ஈரானை அணுசக்தி நாடாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,பாலைவனத்தூது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக