கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, அவர் குடும்பத்தினர், அமைச்சர்கள் மீது சமீபத்தில் நில மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக எடியூரப்பா, உள்துறை அமைச்சர் அசோக் மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதிக்கும்படி ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த 2 வழக்கறிஞர்கள், ஆளுநர் பரத்வாஜிடம் மனு கொடுத்தனர். இந்த பிரச்னையால் ஆளுநருக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதனால், கர்நாடக அரசியலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவி வந்தது. இதன் உச்சக் கட்டமாக, எடியூரப்பா, அசோக் மீது வழக்கு தொடர பரத்வாஜ் நேற்று முன்தினம் இரவு அனுமதி வழங்கினார். இதற்கு ஆளும் பா.ஜ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆளுநரின் செயலை கண்டித்து, நேற்று பந்த் நடத்தியது. பா.ஜ.வினர் ஆங்காங்கு பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, வன்முறையில் ஈடுபட்டனர். மூடாத கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 2 பஸ்கள் எரிக்கப்பட்டன. 75 பஸ்கள் கல்வீச்சில் சேத மடைந்தன.
பெங்களூரில் 60 மாநகர போக்குவரத்து கழக பஸ்களும், மாநிலம் முழுவதும் 15 அரசு போக்குவரத்து பஸ்களும் கல்வீச்சில் சேதம் அடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மைசூர், குல்பர்கா, தார்வார் பல்கலைக் கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. சில இடங்களில் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெங்களூர் எம்.ஜி. ரோடு காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ. மூத்த தலைவர் அனந்த குமார், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டனர். பெங்களூரில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பா.ஜ. தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிடுக்கப்பட்டனர்.
மைசூர் மாநகரில் கடைகளை அடைக்கும்படி பா.ஜ.வினர் வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ம.ஜ.த.வினர், மேயர் சந்தேஷ்சாமி, பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ. சங்கர லிங்க கவுடா ஆகியோர் தலைமையில் கடைகளை திறந்தனர். அப்போது சங்கரலிங்க கவுடாவுக்கும், அவருடைய மகனுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அதேபோல், சிக்மகளூர் மாவட்டத்தில் கடைகளை அடைக்ககோரி பா.ஜ.வினரும், திறக்கக் கோரி ம.ஜ.த. வினரும் வலியுறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. அவர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். அப்போது, இரு தரப்பினரும் கல்வீசி தாக்கி கொண்டனர்.
பந்த்தை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தினர் பிதார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம் நடத்தினர். அவர்களுக்கு போட்டியாக பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, சாலையில் டயர்களை கொளுத்தினர். குல்பர்கா நகரில் திறந்திருந்த கடைகள் மீது பா.ஜ.வினர் தாக்குதல் நடத்தினர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். தும்கூரில் எம்.எல்.ஏ. சுரேஷ்கவுடா தலைமையில் பா.ஜ.வினர் போராட்டம் நடத்தினர். அப்போது, செல்போன் கடையில் புகுந்த கும்பல், லட்சகணக்கான ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்றது. இந்த பந்த்தால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. ஐ.டி. நிறுவனங்கள், வங்கிகள் வெறிச்சோடின. பஸ், ஆட்டோக்கள் இயங்க வில்லை. இதனால், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக