ஞாயிறு, 13 மார்ச், 2011

அந்நிய ஆக்கிரமிப்பு மதங்கள் இந்தியாவில்???



இந்தியா - பல்வேறு மத,இன,மொழி,பண்பாடு, கலாச்சாரம், நிறம், வழிபாடு, என மனிதவாழ்வின் வகைப்படுத்தக்கூடிய பெரும்பாலான காரணிகள் அத்துனையிலும் வேறுபாடுகளை கொண்ட ஒரு பன்முக சமுதாயத்தின் தாய் நாடு.ஆனால் இத்துனை வேற்றுமைகளை கொண்ட மக்கள் ஒரு சமுதாயமாக வாழ்வதை உலகில் வேறெங்கும் காண முடியாது.இந்தியாவை உலகின் வேறெந்த நாட்டுடனும் ஒருபோதும் ஒப்பிட்டுவிட முடியாது....

இந்தியா - ஹிந்து மதத்தை பின்பற்றும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு,பல்வேறு மதங்களுக்கும் தாய் நாடு,மேலும் உலகில் உள்ள பெரும்பான்மை மதங்களை பின்பற்றும் மக்களை கொண்ட நாடு.இந்தியாவில் குறிப்பாக இஸ்லாமும், அரசியலுக்காக கிருஸ்தவமும் அந்நிய மதங்கள் என்ற வட்டத்துக்குள் கொண்டு வரப்படுகின்றன.நாமறிந்து கடந்த இரு நூற்றாண்டுகளாக இந்தியாவை அந்நிய மதங்கள் ஆக்கிரமித்துவிட்டதாக ஹிந்துத்துவாக்களின் கூச்சல் மெதுவாக ஆரம்பித்து தற்போது உக்கிரமாகி கொண்டிருக்கிறது.சரி இந்தியாவுக்கு எது தனது மதம் எது அந்நிய மதம்.???

பெரும்பான்மை மக்கள் பின்பற்றுவதாக இன்று கற்பிக்கப்படும் ஹிந்துமதம் இந்தியாவின் மதமா? "என்ன கற்பிக்கப் படுகிறதா??" என யாரும் கொந்தளிக்க தேவையில்லை.இருந்தாலும் அதுதான் உண்மை.ஹிந்து என்ற வார்த்தையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து “நானும் ஒரு ஹிந்து”எனும் கட்டுரை விரிவாகவே அலசுகிறது.

ஆரியர்களின் வருகைக்கு முன் இந்தியாவுக்குகென,குறிப்பிட்ட மதங்கள் இருந்திருக்க வில்லை. அக்கால இந்திய மக்கள் சிலை வணங்கிகளாகவும், தங்கள் இஷ்ட தெய்வங்களை தாங்களே தேர்வு செய்து வழிபடுபவர்களாகவும் இருந்தனர்.இதில் கல்,மரம்,நிலம்,நெருப்பு,சூரியன், மனிதன், எனவாறாக உயர்தினை,அஃறினை அனைத்தும் அடங்கும். இப்படியான மனிதர்களிடம் ஆரியர்கள் சிந்துநதியை கடந்து இந்தியாவை அடைந்தபோது,உடல் உழைப்பை பிரதானமாகக் கொள்ளாத அவர்கள்,இந்திய மக்களின் முதுகுகளின் மீது சவாரி செய்துவிட முடிவுகட்டி,கடவுளின் பெயரால் அவர்களிடையே உயர்வு தாழ்வு பாராட்டி,சொல்லானா கொடுமைகள் செய்து,சுகமானதொரு சொகுசு வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.

அவர்கள் கொண்டுவந்த வேதங்களும்,அவர்களது வரணாசிரம தத்துவமும்?? மனு(அ)தர்மமும், அப்பாவி இந்திய மக்களுக்கான மதச்சட்டதிட்டங்களாகின..அவர்களின் வெளிப்படையான மட்டுமல்ல, அடிப்படையான உரிமைகள் கூட பறித்துக்கொள்ளப்பட்டன.பார்ப்பனர்கள் தவிர யாவரும் பிறப்பாலும், சாதிகளாலும் தாழ்த்தப்பட்டவர்களாக நிறுத்தப்பட்டனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சொற்பத்திலும் அற்பமான ஒரு கூட்டம்,முழுமையாக நாட்டையே,சாதிகளாலும், கடவுளின் பெயராலும்,பிறப்பாலும்,பிளவுபடுத்தி காலாகாலமும்,அவர்களை வன்கொடுமை செய்து, தீண்டத்தகாதவர்களாகவும்,தெருவில் நடக்க தகுதியற்றவர்களாகவும், இழிபிறவியனவும், இழித்து பழித்து அவர்களை கல்வியறவர்களாகவும்,கஞ்சிக்கு அற்றவர்களாகவும் ஆக்கிவைத்ததை அத்துனை எளிதில் விவரித்து விட முடியாது.


அவர்களால் இந்திய மக்கள் பட்ட துயர்களை எழுதித்தீறாது.இந்தியாவின் அத்துனை முடுக்குகளிலும் அவர்களின் கை நீண்டு இருந்தது.பார்ப்பனர் தவிர அனைத்து மக்களின் மீதும் அவர்களின் கொடுங்கோன்மை விரவி இருந்தது.இன்றும் பல இடங்களில் அவர்களது கைவரிசை நிகழாமல் இல்லை. எனது உடன் பணிபுரியும் ஹிந்து(தாழ்த்தப்பட்ட) நண்பர்,இன்றும் சொல்வார்..அவர் முன்னர் பணிபுரிந்த இடத்தில் வேலை செய்த சக ஊழியனான பார்ப்பனன் ஒருவன்,மதிய உணவுவேலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பாட்டை பகிர்ந்து உண்ண,அவன் அவனது உணவை கையை உயர்த்தி தொப்பென்று கையில் விழும்வண்ணம்தான் தருவானாம்..(பிச்சை போல)தப்பித்தவறி, இவர்களது கை அவனது சாப்பாட்டில் பட்டுவிட்டால் அவ்ளோதான்..அதை கீழே கொட்டிவிட்டு, சாப்பிடாமல் இருந்துவிடுவானாம்..இது சாதீய வேறுபாட்டின் கடைசிப்படிநிலை.ஏனெனில் அவர்களின் காலுக்கு கீழே இருந்தவனெல்லாம் இன்று மேலே வந்துவிட,அவர்கள் சற்றே அடக்கி வாசிக்க வேண்டிய சூழல் இது.

சாதியக்கொடும் வரலாற்றுத் தடங்களில் ஒன்றாக இன்றைய குமரி மாவட்டத்தில் 18-19ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டம் அறிந்துகொள்வதற்காகவும், உதாரணமாகவும், உங்களுக்கு....

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மிகப் பெரும் மக்கள் போராட்டம் அன்றைய கேரளப் பகுதியிலிருந்த தென் திருவிதாங்கூரிலும், தமிழக எல்லைப் புறத்திலும் நடைபெற்றது. சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் சாதி மக்கள் நம்பூதிரிகள் (பார்ப்பனர்கள்) உள்ளிட்ட ஆதிக்க சாதிகளால் கடுமையான இன்னலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டனர். இந்து உயர் சாதி மக்களிடம் ஒடுக்கப்பட்ட இந்து வகுப்பினரான பள்ளர், பறையர், புலையர், ஈழவர் ஆகியோர் எத்தனை அடி தூரத்திலிருந்து நின்று பேச வேண்டும் என்றெல்லாம் அடிக்கணக்கு வைத்து தீண்டாமையைப் போற்றி இருக்கிறார்கள். சாணார் போன்ற கண்ணில் படக்கூடாத சாதி மக்களும் இருந்திருக்கிறார்கள். (உலகில் எங்கும் இப்படி ஒரு கொடுமை நடந்தது கிடையாது. இனி நடக்கவும் கூடாது) ஆதிக்க சாதிகளால் நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தீட்டுத்தூரத்தை எவரேனும் மீறினால் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

உழைக்கின்ற சாணார் சமூக மக்கள் குடைப்பிடிக்கக்கூடாது, செருப்பு அணிதல் கூடாது, மாடி வீடு கட்டக்கூடாது, தங்க நகைகள் அணியக் கூடாது, பெண்கள் தங்களது மார்பினை மேலாடைகளால் மறைக்கக்கூடாது, முழங்காலுக்குக் கீழே உடுத்தக்கூடாது, பசு மாடுகள் வளர்க்கக்கூடாது என்று பல்வேறு கூடாதுகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.


சாதி வரிசையின் நீண்ட படிகளில்,பிராமணர்களோ தெய்வங்களின் முன்னிலையில் தங்கள் மார்பைத் திறந்து போட்டார்கள்....மற்ற தாழ்ந்த சாதிகளைப் போல நாடார்களும் எந்த நேரத்திலும் தங்கள் மார்பை மூடுவதினின்றும் தடுக்கப்பட்டார்கள்... நாடார் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய உடை அரையில் முழங்கால் வரை ஒரு முரட்டுத் துணியைச் சுற்றிக் கொள்ளுவதாகும் (ஹாட்கிரேவ் 59, தெற்கிலிருந்து என்ற நூலில்) 1829ஆம் ஆண்டு சாணார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று திருவிதாங்கூர் அரசாங்கமே உத்தரவிட்டது.

“பறையனைத் தொட்டால் தீட்டு, சாணானைப் பார்த்தாலே தீட்டு”

சாணார், ஈழவர், காவேரிநாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர் போன்ற சாதிகளில் உள்ள பெண்கள், மேலாடை அணிவதிலிருந்து இந்து ஆதிக்க சாதிகளான நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள், தமிழ்ப் பார்ப்பனர்களால் தடை செய்யப்பட்டனர். அரசில் பெரும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் முன்பு திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் மேலாடை கொண்டு மூடுவது சாதிக் குற்றமாகக் கருதப்பட்டது.திருவிதாங்கூர் மகாராணியின் முன் ஒரு சாணார் சாதிப் பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்காக அவரது மார்பை வெட்ட திருவிதாங்கூர் நிர்வாகம் உத்தரவிட்டது.

அக்காலத்தில் வரி வசூலிக்க வரும் மேலாதிக்க பார்ப்பனன் ஒருவன்,திறந்த மார்போடு நின்ற ஒரு தாழ்ந்த சாதிப்பெண்ணின் மாரில் அவனது எழுதுகோலால் தட்டிவிட,தாய்ப்பால் அவன்மீது தெறித்துவிட்ட ஒரே காரணத்திற்காக அப்பெண்ணின் மாரை அறுத்து எறிந்த கொடுமைகளும் நிகழாமல் இல்லை.


வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும் சாணார் உட்பட அனைத்து தாழ்த்தப்பட்ட சாதி நபர்களும் நீதிபதி அமரும் இருக்கையிலிருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.


கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் தாலி, மேலாடையுடன் வந்த பெண் அரசாணையை எதிர்த்த குற்றத்துக்காக பொது இடத்தில் தாலியறுத்து உடை களைந்து அரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


மேற்சொன்ன இவை யாவும் இந்தியாவில் சாதிக்கொடுமை எனும் 1000 பக்க புத்தகம் உண்டென்றால் அதில் ஒரு வரி மட்டுமே...இப்படிப்பட்ட சூழலில் சிக்கித்தவித்து திணறிய மக்களுக்கும்,எதைத் தின்றால் பித்தம் தெளியும் என வாடிய மக்களுக்கும் வரப்பிரசாதமாய் வந்தவைகளே,ஹிந்துமதம் தவிர்த்த இந்தியாவில் தோன்றிய புத்தமதம்,சமணம்,சீக்கியம், போன்றவையும்,இஸ்லாம்,கிருஸ்தவம் போன்றவையுமாகும்.இந்தியா கண்ட இப்புதிய மதங்கள் வெகுவாக வளர்ச்சி அடைய பெரிதும் உதவியது, பார்ப்பனம் போற்றும் ஹிந்துமதமே அகும்....

இஸ்லாமும் கிருஸ்தவமும்,வெளிநாடுகளின் இருந்து வந்துவிட்டதால் அவை அந்நிய மதங்களா?அப்படிப்பார்த்தால் இன்று ஹிந்துமதத்தின் அடிப்படையாக கொள்ளப்படும் வேதங்களும்,இன்னபிற இத்யாதிகளும் ஆரியர்களான பிராமணர்களின் கக்கத்தில் இடுக்கிக் கொண்டுவந்ததுதானே. அப்படியானால் முழுமுதற் அந்நிய மதம் ஹிந்துமதம் தானே...இன்றைய ஸ்பெக்ட்ரம் போல ஃபஸ்ர்ட் கம் ஃபஸ்ர்ட்,என வந்தவர்கள் இடத்தை பிடித்து,பின் மடத்தையும் பிடித்துவிட்டால் அவர்களே இந்த மண்ணுக்கு மைந்தர்களாகிவிடுவார்களா??

ஆனால் ஹிந்து மதத்திற்கு எதிராக தோன்றிய புத்தமதமும், சமணமும்,இந்தியாவில் இருந்து கழுவேற்றி,பார்ப்பனத்தாலே துடைத்தெறியப்பட்டுவிட்டது. சீக்கியம் தப்பித்துக்கொண்டது.இஸ்லாம் அதன் வழுவான கொள்கைகளால் வளர்ச்சி அடைந்தது.வளர்ச்சி அடைகிறது.

அவர்களின் கொடுமைதாளாமலும்,தங்களின் தன்மானத்தை பாதுகாத்துக்கொள்ளவும், அவர்கள் பிற மதங்களை அணுகவேண்டியதானது. அதன் கொள்கைகள் அவர்களின் கண்ணியத்தை பாதுகாத்தது. 

ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. கிருஸ்தவ ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதால்,அவர்களின் கால்களை கழுவிக்கொண்டிருந்த பார்ப்பனம், அவர்கள் முன்னிலையில் தங்களின் குடுமியுடன் சேர்த்து வால்களையும் சுருட்டிக்கொண்டது. கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் கிடையாது என்பதாக திருவாங்கூர் சமஸ்தானம் தீர்ப்புக் கூறியது.ஆங்கிலேய அரசின் வற்புறுத்தலால் சொல்லப்பட்ட அந்தத் தீர்ப்பு வேறு விதமான விளைவு ஏற்படுத்தியது. அதன் பின் கன்னியாகுமரியில் ஏற்பட்ட மாற்றங்கள் யாரும் எதிர்பாராதது. அனைவரும் கூடிப் பேசினர். மதங்களையும் கடவுள்களையும் விட உரிமைதான் முக்கியம் என்று முடிவெடுத்தனர். 80%க்கும் அதிகமான நாடார் இன மக்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். பல்வேறு போராட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறாத தோள்சீலை அணியும் உரிமை கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதன் மூலமே அங்குள்ள நாடார்களுக்குக் கிடைத்தது. இன்றும் குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றி இருப்பதற்கு இதுவே காரணம்.

இது ஒரு வகையில் கட்டாய மதமாற்றமே...ஆனால் கட்டாயப்படுத்தியது யார்??..பார்ப்பனனே...இன்று குதிரை சவாரிக்கு ஒருத்தனும் இல்லாது போக...இழந்ததை கொஞ்சமேனும் மீட்க,வெருமனே அற்ப அரசியலுக்காக மட்டுமே இன்று நானும் ஹிந்து நீயும் ஹிந்து என தலித்களையும் பிற மக்களையும் பார்த்து வாயலக்கும் அந்த பிராமணமே,அன்று அவர்களை அறுத்தெறிந்தது...

இந்தியாவில் பிறந்து,இந்தியனாக வாழும் ஒவ்வொரு முஸ்லீமும்,கிருஸ்தவனும்,ஒரு காலத்தில் (பிராமணனாக அல்ல), குப்பனாக சுப்பனாக,பார்ப்பனனின் காலில் மிதிபட்டவர்கள் என்பதை மறுக்கமுடியாது....

ஆனால் இன்று அந்த நிலை இல்லாது கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், அதே குப்பனின் வாரிசுகள் வாழக் காரணம் பிராமணம் போற்றிய மதத்தை தூக்கி குப்பையில் எறிந்ததே...அத்தகைய மதங்கள் இந்தியாவை அடைந்திருக்காவிடில்,இன்று நானும்,எனது கிருஸ்தவ நண்பனும்,கணினியின் முன் அமர்ந்திருக்க முடியாது.கக்கத்தில் துண்டை வைத்துக்கொண்டு பாப்பானுக்கு கூனக்கும்பிடு போட்டுக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.அதை செய்யவிடாத மதமாக இஸ்லாம் இருந்துவிட்டபடியால், அவர்களுக்கு என்ன செய்வதென அறியாமல் குடுமியை பிய்த்துக்கொண்டு யோசிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.. அதன் வெளிப்பாடே இத்தகைய அர்த்தமற்ற கோஷங்களும், பரப்புரைகளுமாகும்...

இங்குள்ள மக்களை மதங்களின் போர்வையால் ஆக்கிரமித்த பார்ப்பனமே, இன்று அவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தவர்கள்,அவர்களின் கண்முன்னே தலைநிமிர்ந்து வாழ்வது பொருக்காது ஓரமாய் நின்று வைக்கும் ஒப்பாரியே “அந்நிய ஆக்கிரமிப்பு மதங்கள் இந்தியாவில்...”

தோள்சீலை போராட்டக் குறிப்பு சகோ முஜீப் அவர்களின் தளத்தில் இருந்து...

அன்புடன்
ரஜின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக