புதன், 16 மார்ச், 2011

பழகிய பொருள்... அழகிய முகம்! நீள கூந்தலுக்கு உளுத்தம் பருப்பு!

கண்ணுக்குக் குளிர்ச்சி, முகத்துக்கு மலர்ச்சி, கூந்தலுக்குப் பொலிவு, உடலுக்கு வலிமை கொடுக்கும் அழகு + ஆரோக்கிய ராணியான உளுத்தம் பருப்புதான் நம் அஞ்சறைப் பெட்டி அணிவகுப்பில் அடுத்து வருகிறாள்!

மென்மையான கூந்தலை விரும்புகிறவரா நீங்கள்? கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டால் முரட்டுக் கூந்தலும் பட்டுப்போல் மிருதுவாகும்!

15 முழு உ.பருப்பை புளித்த தயிரில் இரவே ஊறவையுங்கள். காலையில் அரைத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் சீயக்காய்த்தூளைக் கலந்துகொள்ளுங்கள்.


வாரம் ஒருமுறை இந்த பேஸ்ட்டை தலைக்குத் தேய்த்து அலசுங்கள். தலைமுடி கண்டிஷனாக இருப்பதுடன், சோர்வு நீங்கி, கண்கள் ‘பளிச்’சென்று பிரகாசிக்கும். சிலருக்கு கூந்தல் செம்பட்டை நிறத்தில் இருக்கும். கருகருவென்று இல்லையே என்று கவலைப்படுவார்கள். அவர்களுக்கான எளிய வைத்தியம் இது! உ.பருப்பு & அரை டீஸ்பூன், கறிவேப்பிலை & 10. இவற்றைப் புளித்த மோரில் ஊறவைத்து அரையுங்கள்.

இந்த பேஸ்ட்டை தலையில் ‘பேக்’ ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, கூந்தல் கருகருவென்றாகும். நீளக் கூந்தல் பிரியையா நீங்கள்? உங்களுக்கே உங்களுக்கான அசத்தல் சிகிச்சை இது. இதற்கு உளுந்துகூடத் தேவையில்லை... இட்லி, தோசைக்கு ஊறவைத்த உ.பருப்பின் தண்ணீரே போதுமானது!

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் & 2, செம்பருத்தி இலை & 5. இந்த இரண்டையும் அரைத்து இதனுடன் வெந்தய பவுடர் & 1 டீஸ்பூன் சேர்த்து உ.பருப்பு ஊறவைத்த தண்ணீரையும் கலந்துகொள்ளுங்கள்.

இதை தலையில் ‘பேக்’ ஆகப் போட்டு உலர்ந்ததும் அலசுங்கள். வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்துவர, தலை முடியின் வேர்ப் பகுதிகளில் வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் நீளமாக வளரத் தொடங்கும்.

உ.பருப்பு கழுவிய தண்ணீரே நுரைத்து, ஷாம்பு மாதிரி அழுக்கை நீக்குவதால் தனியே ஷாம்பு போடவேண்டிய அவசியமில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு!

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் சிலருக்கு அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். வறுத்த உ.பருப்பு & 100 கிராம், கொட்டை நீக்கிய புங்கங்கொட்டை & 10, கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் & 5. இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வாகப் பிரகாசிப்பீர்கள். கண்ணுக்குக் கீழே கருவளையம் விழுந்து எப்போது பார்த்தாலும் ‘கவலைக்குரிய’ மனுஷியாகக் காணப்படுகிறீர்களா? உங்கள் கவலையைப் போக்குகிறது உ.பருப்பு!

2 துண்டு வெள்ளரிக்காயில், 2 முழு உ.பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரையுங்கள்.
இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து அலசுங்கள். வெள்ளரிக் காய், கருவளையத்தைப் போக்கி ‘ப்ளீச்' செய்யும். உ.பருப்பு, கண்களுக்குக் கீழே இருக்கிற தோலின் முரட்டுத்தனத்தைப் போக்கி, தோலை மென்மையாக்கும்.

முகத்தில் சுருக்க வரிகள் தோன்றி கவலைப்படுத்துகிறதா? மனம் சுருங்கவேண்டாம்.
கசகசா & அரை டீஸ்பூன், வெந்தயம் & கால் டீஸ்பூன், முழு உ.பருப்பு&4. இவற்றை ரவைபோல் அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கஸ்தூரி மஞ்சள் & ஒரு சிட்டிகை கலந்து பேஸ்ட்டாக்குங்கள்.
வாரம் ஒருமுறை இந்த பேஸ்ட்டால் முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள். சுருக்கம் முற்றிலுமாக நீங்கி, முகம் படு இளமையாகிவிடும்.

முகப் பருக்கள்... பலருக்கும் மிகப் பெரிய பிரச்னை. இந்தப் பருக்களுக்கும் ‘பை’ சொல்லலாம் உ.பருப்பின் உதவியுடன்.

புதினா சாறு & 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உ.பொடி & 1 டீஸ்பூன், சந்தனம் & கால் டீஸ்பூன். இவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்குங்கள்.

பருக்களின்மேல் இந்த பேஸ்ட்டைப் பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.

சிலரது உதடுகள் கறுப்பு லிப்ஸ்டிக் போட்டது போல இருக்கும். அவர்களுக்கு ரோஜா இதழ்களை வாக்களிக்கிறது உ.பருப்பு.

வறுத்து அரைத்த உ.மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள்.
இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில், உதடுகள் ரோஜா நிறமாவதுடன், மென்மையாகவும் ஆகும்.

கால்களில் பாளம் பாளமாக பித்த வெடிப்புகள் இருக்கின்றனவா? இந்த சிகிச்சையைச் செய்து பாருங்களேன்...
வெள்ளை ரவை - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன். இந்த இரண்டையும் ரவை மாதிரி பொடித்து அதில் எலுமிச்சை சாறை கலந்து பேஸ்ட்டாக்குங்கள்.
இரவு படுப்பதற்கு முன் இந்த பேஸ்ட்டை வெடிப்பின் மேல் தேய்த்து, உலர்ந்ததும் கழுவுங்கள். பிறகு பாதத்தைத் துடைத்துவிட்டு, சிறிது கிளிசரின் தடவுங்கள். நாலைந்து நாட்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், பித்த வெடிப்பு, சேற்றுப் புண் போன்றவை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். காலும் மெத்தென்று இருக்கும்.

குழந்தை பிறந்த பிறகு வயிற்றில் ஏற்படுகிற ‘ஸ்ட்ரெச் மார்க்’குகள் பல பெண்களின் தீராத கவலை. அதற்கும் தீர்வு வைத்திருக்கிறது உ.பருப்பு!

வறுத்து அரைத்த உ.மாவு & 1 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் & 1 டீஸ்பூன். இந்த இரண்டையும், உளுந்து ஊறவைத்த தண்ணீருடன் கலந்துகொள்ளுங்கள்.

இந்தக் கலவையை வயிற்றில் ‘பற்று’ மாதிரி போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வரிகள் மறைவதுடன் அரிப்பும் ஓடியே போகும்.

குறிப்பு: உ.பருப்புப் பொடிகளை தயாரித்து, பல நாட்கள் வைத்து உபயோகிக்கக் கூடாது. உடனடியாகப் பயன்படுத்தவேண்டும். அவ்வப்போது கொஞ்சமாக அரைக்கவேண்டும் என்பதால் இவற்றை அரைப்பதற்கென்றே தனியாக ஒரு சிறு அம்மியை வைத்துக் கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக