திங்கள், 4 ஏப்ரல், 2011

பாப்புலர் ஃப்ரண்டின் தேர்தல் நிலைபாடு!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாப்புலர் ஃப்ரண்டின் அரசியல் நிலைபாடு குறித்து மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற்பப்பட்டுள்ளதாவது.

எஸ்.டி.பி.ஐ:

முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய பாடுபடுவது, வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்த பாடுபடுவது,
உலமா நலவாரியத்திற்கு அதிக நிதி ஒதுக்க பாடுபடுவது, முஸ்லிம் இளைஞர்களுக்கு தொழில் துவங்க வட்டியில்லா கடன் கிடைக்க பாடுபடுவது, பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் சமூகம், பழங்குடியின மக்கள் மற்றும் மீன்வ சமூக நலனை பாதுகாக்க பாடுபடுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சக்திப்படுத்த தமிழக தேர்தலில் களமிறங்கி இருக்கும் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) போட்டியிடும் 8 இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் தனது முழு ஆதரவை வழங்குகிறது. இதனடிப்படையில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடும் தொகுதிகளான, துறைமுகம், தொண்டாமுத்தூர், திருப்பூர் தெற்கு, பூம்புகார், ராமநாதபுரம், கடையநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் புதுவையில் நிரவி திருப்பட்டினம் ஆகிய 8 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்கி, களப்பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ம.ம.க:

சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், சிறுபான்மை மக்களின் நலனுக்காக பாடுபடும் மனித நேய மக்கள் கட்சி (ம.ம.க) போட்டியிடும் சேப்பாக்கம், ஆம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் முழு ஆதரவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ம.ஜ.க‌:

மக்கள் நலனுக்காக பல வருடங்களாக அயராது பாடுபட்டு வரும் மக்கள் ஜன நாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் போட்டியிடும் தொகுதியான அறந்தாங்கியில் முழு ஆதரவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க கூட்டணி:

மேற்கண்ட 11 தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் சிறுபான்மை மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன் மீது அக்கறையுள்ள தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க‌:

சகோதர வாஞ்சையுடன் பழகி, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே வகுப்புவாதத்தை தூண்டி, அவர்களிடையே மத துவேசத்தை வளர்த்து, அதில் அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் பா.ஜ.கவிற்கு எதிராக, குறிப்பிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்து, அவர்களின் உண்மை முகமான பாசிஸத்தையும், ஊழல் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அவர்கள் கடைபிடித்து வரும் இரட்டை நிலைகளையும் மக்களிடையே தோலுரித்து காட்டுவது என முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் மக்கள் பா.ஜ.கவை புறக்கணித்துவிட்டனர் என்பதை கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் தெளிவாக பறைசாற்றி விட்டன. தமிழகத்தில் தனது முகவரியை இழந்து நிற்கும் பா.ஜ.கவை மக்கள் இந்த தேர்தலிலும் புறக்கணிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மத துவேச கட்சியான பா.ஜ.கவை புறக்கணித்த அனைத்து அரசியல் கட்சியின் நிலைப்பாட்டையும் பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது.

ஜன நாயகக் கடமை:

மக்கள் அனைவரும் ஓட்டுரிமை என்ற தங்களது மிக முக்கியமான ஜனநாயகக் கடமையை முறையாக பயன்படுத்தி நல்லதொரு ஆட்சி மலர பாடுபட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக